புதன், 6 ஆகஸ்ட், 2014

(5)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : "விளையாட்டு மைதானங்கள்"


என்ன விசு, கையிலே பெரிய பைய தூக்கிகொண்டு உன் ராசாத்திக்களோடு எங்க கிளம்பிட்ட  என்றான் என் பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் (ஆங்கிலத்தில் தான்).  பெரிதாய் எதுவும் இல்லை, இன்று வீடு வந்து சேர சிறிது நேரமாகிவிட்டது, இருந்தாலும், வளரும் பிள்ளைகள் தினமும் வெளியே சென்று ஓடி ஆடி விளையாடவேண்டும் என்பது என் கொள்கை. அதனால்  அருகில் உள்ள டென்னிஸ் மைதானத்திற்கு விளையாட சென்றுகொண்டு இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.



மணி கிட்டத்தட்ட 7, சற்று இருள துவங்கியது. இருந்தாலும் பரவாயில்லை. அங்கே அந்த டென்னிஸ் மைதானத்தில் தான் விளக்குகள் வைக்க பட்டு இருக்குமே, கவலை இல்லை என்று கிளம்பினோம். சரி, விளக்குகள் வைத்த டென்னிஸ் மைதானம், அதில் விளையாட நிறைய பணம் செலவாகுமே என்று சில பேர் நினைப்பீர்கள், தவறே இல்லை. ஆனால் , இதற்கான பணத்தை தான் நான் வருமான வரியின் மூலம் கட்டிவிட்டேனே. இந்த மைதானங்கள் நம் வரி பணத்தின் உதவியால் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. இதில் விளையாட பணம் கட்ட தேவையில்லை.

அந்த மைதானம் சென்று அடையும் பொது 7:15. அதில் இருந்த அத்தனை கோர்டிலேயும் சிலர் விளையாடி கொண்டு இருந்தனர். நாங்கள் அங்கு சென்றவுடன் அங்கே இருந்த அட்டவணையில் எந்த கோர்ட் அடுத்து காலியாகும் என்று தெரிந்து கொண்டு அதன் அருகில் காத்து இருந்தோம். அதில் விளையாடி கொண்டு இருந்த ஒருவர், நேராக வந்து, இன்னும் 10 நிமிடங்களில் நாங்கள் முடித்து விடுவோம், அதற்க்கு பிறகு நீங்கள் ஆடலாம் என்றார்.



சரி என்று தலையை ஆட்டிவிட்டு, சுற்றிலும் என்ன நடகின்றது என்று நோட்டம் விட்டேன். அருகில் 3 கூடை பந்து மைதானங்கள், அதை தாண்டி ஒரு "பேஸ் பால்" மைதானம், மற்றும் பாலகர் விளையாட சிறிய பாலகர் பூங்கா. அனைத்திலேயும் அநேகம் பேர் விளையாடி கொண்டு இருந்தனர்.
அடேடே, அப்போது தான் நினைவிற்கு வந்தது. ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் அமெரிக்கா முன்னிலை வகிக்க இதுதான் காரணமோ?

எத்தனை மைதானங்கள், அத்தனையிலும் விளக்குகள். எவ்வளவு மக்களுக்கு உதவி. பிள்ளைகள் தான் எவ்வளவு சந்தோசமாக விளையாடுகிறார்கள் என்று நினைத்து கொண்டே இருக்கையில், எனக்கு முன்னால் ஆடிக்கொண்டு இருந்தவர்கள், நாங்கள் முடித்து விட்டோம், இனி நீங்கள் களத்தில் இறங்கலாம் என்றார்.

சரி என்று பிள்ளைகளோடு ஆடி கொண்டு இருக்கையில், நண்பன் தண்டபாணியிடம் இருந்து ஒரு போன்.

விசு, என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறாய்?

பிள்ளைகளோடு டென்னிஸ்..

கொடுத்து வைத்தவன் நீ விசு, சரி, உன்னிடம் வருமான வரியை பற்றி ஒரு கேள்வி கேட்க வேண்டுமே..

நான் ஆட்டம் முடித்து விட்டு அழைக்கவா?

இல்ல விசு, இப்பவே பேசவேண்டும்.

சொல்லு தண்டம்,

சம்பாதிப்பதில் கிட்டத்தட்ட 40% வரியில் போகிறதே, அதை எப்படி தவிர்ப்பது?

தண்டம், அதை எப்படி தவிர்ப்பது என்பதை விட்டு விட்டு, எப்படி அனுபவிக்கலாம் என்று கற்று கொள்.

புரியில விசு.

தண்டம், உனக்கே தெரியும், நம் வரியில் தான் இங்கே நாடே ஓடுகின்றது.

சரி,

அதில் நீ கையை வைத்தால், உன் வீட்டில் இருந்தே நீ திருடுவதற்கு சமம்.

ஆமாம் விசு. ஆனால் அதை நீ எப்படி அனுபவி என்று கூறுகிறாய்?

தண்டம், இந்த வரி பணத்தில் தான் அருமையான நூலகங்கள், மைதானங்கள், விளையாட்டு அரங்கங்கள் போல நிறைய விஷயங்கள் நடத்த படுகின்றன.
சரி, அதுக்கும் இதுக்கும் என்ன?

மாலை 7- 8 மணி போல் நீ தினமும் என்ன செய்கிறாய்?

ஒன்னும் பெரிசா இல்ல, இந்த மாதிரி வரி, இல்லாவிடில் டிவி தான்..

அதை விட்டு விட்டு நீ கட்டிய வரி பணத்தில் கட்டிய டென்னிஸ்கோர்ட் போ.

உன் பணத்தை அனுபவி, முடிந்தவுடன் நூலகம் போ, உன் பணத்தை அனுபவி!

இது போல், வரி பணத்தை அவாய்ட் பண்ணாமல் அனுபவிக்க கற்று கொள்.

பேசி முடித்து விட்டு நேரத்தை பார்த்தேன் கிட்டதட்ட 8:45. எங்களுக்கு பிறகு ஆட யாரும் காத்து கொண்டு  இல்லை (தண்டபாணி போன்ற நிறைய நண்பர்கள் வரியை கட்டிவிட்டு வீட்டில் உட்கார்ந்து இருப்பது எங்களுக்கு ஜாலியோ ஜாலி.) இன்னும் சற்று நேரம் ஆடினோம்.

பிறகு வீட்டை வந்து சேர்ந்தவுடன், தாய் மண்ணில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம் என்று வலைத்தளம் சென்றவுடன், கண்ணுக்கு எதிரில்... "இரண்டு இந்திய அதிகாரிகள் காமன்வெல்த் போட்டிகளில் கைது" அதற்கும் அடுத்து "சுரேஷ் களவாடி"  டெல்லி காமன்வெல்த் போட்டியில் செய்த அட்டூழியம் . மனது நொந்து விட்டது. என்று வரும் என் தாய் நாட்டிற்க்கு விடுதலை என்று யோசித்தேன்...

பின்குறிப்பு; மொத்த மக்கள் தொகையில் 1% கூட இல்லாத அரசியல்வாதிகளின் அநியாயத்தினால் கோடி கணக்கான மக்கள் தங்கள் உரிமையை இழக்கிறார்களே! எங்கே போய் ஒப்பாரி வைப்பது. "நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலை கெட்டமந்தாரை....'

9 கருத்துகள்:

  1. \\\ மொத்த மக்கள் தொகையில் 1% கூட இல்லாத அரசியல்வாதிகளின் அநியாயத்தினால் கோடி கணக்கான மக்கள் தங்கள் உரிமையை இழக்கிறார்களே! எங்கே போய் ஒப்பாரி வைப்பது. "நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலை கிட்ட மந்தாரை....\\\

    படுத்துக்கொண்டு போர்த்தினாலும் போர்த்திக்கொண்டு படுத்தாலும் ஒன்றுதானே. அமெரிக்காவில் வரி கட்டிவிட்டு நூலகம், விளையாட்டு மைதானம் என அனுபவிக்கிறாங்க. இந்தியாவில் வரி கட்டுவதை தவிர்த்து அந்த பணத்தில் அனுபவிக்கிறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது நகைச்சுவையாக இருந்தாலும், எதோ மனதில் ஒரு உறுத்தல். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பான். கடைசியாக.. ".A Nation and its People Deserves its Leaders". எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தைகள். வருகைக்கு நன்றி,

      நீக்கு
  2. வணக்கம்

    ///பிறகு வீட்டை வந்து சேர்ந்தவுடன், தாய் மண்ணில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம் என்று வலைத்தளம் சென்றவுடன், கண்ணுக்கு எதிரில்... "இரண்டு இந்திய அதிகாரிகள் காமன்வெல்த் போட்டிகளில் கைது" அதற்கும் அடுத்து "சுரேஷ் களவாடி" டெல்லி காமன்வெல்த் போட்டியில் செய்த அட்டூழியம் ///

    கைவந்த கலைகள் மாற்றவே முடியாது. அண்ணா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைவந்த கலை... நன்றாக சொன்னீர்கள். வருகைக்கு நன்றி. கவிதை போட்டி எப்படி போகின்றது..?

      நீக்கு
  3. சிந்திக்கவைக்கும் பதிவு. இப்படியும் ஆட்சி நடக்கிறது என்பதை தங்கள் பதிவைப் பார்த்தாவது மக்கள் புரிந்துகொள்ளட்டும்.

    தொடர்ந்து எழுதுங்க விசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி முனைவர் அவர்களே, மீண்டும் சொல்கிறேன்... நெஞ்சு பொறுக்குதிலையே....

      நீக்கு
  4. சிறந்த ஆய்வும் கருத்தும்
    தொடருங்கள்

    பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
    http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...