புதன், 16 ஜூலை, 2014

பொருள் விளங்கா உருண்டை, .சிறு கதை!

அருமையான பெற்றோருக்கு 8வது மகனாக பிறந்த எனக்கு நேர்ந்த கதைதான் இது. 6 வயதில் என் தந்தை இறந்தது கூட தெரியாமல் அவர் இறுதி ஊர்வலத்தின் போது அடுத்த நாளுக்கான என் கணக்கு வீட்டு வேலையை செய்து கொண்டு இருந்த பொருள் விளங்காத சிறுவன் நான். தந்தை இறந்த இரண்டே மாதங்களில் நான் என் விடுதி வாழ்க்கைக்கு தயார் ஆனேன். பாவம் என் தாயார். என்ன செய்வார்கள். 


ஒருபுறம் வேலை, ஒருபுறம் 8 பிள்ளைகள். பிழைக்க வேண்டுமே.வாழ்வில் ஒருவன் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் ஆனால் கல்வி அறிவு இல்லாமல் இறக்க கூடாது என்பதை உணர்ந்து அறிந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அந்த காலத்தில் பட்டம் பெற்றவர் அல்லவா, அந்த பாதிப்பு.

குருவி கூடு போல் வாழ்ந்த எங்கள் குடும்பம் அந்த தலைவனின் இறப்பினால் சிதறி சின்னாபின்னம் ஆகியது. யார் மேல் போடுவது பழியை? இந்த குடும்பத்திலும் இளையவனாக பிறந்ததால் தாய்க்கும் சரி தந்தைக்கும் சரி ஒரு செல்லமாக வளர்ந்து விட்டேன். அது சரி, என் சோக கதையை என் இங்கே சொல்லுகிறேன் என்று கேக்க தோன்றும். சற்று பொறும்.

மூத்தவன் 14 இளையவன் 4, நடுவில் 4 பெண் பிள்ளைகள் வேறு. என்ன செய்வாள் என் தாய். வேலைக்கு செல்ல வேண்டும், பிழைப்பு நடத்த வேண்டும், பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். அவர் அறிவிற்கு ஏற்றாற்போல் எங்கள் அனைவரையும் வேறு வேறு விடுதிகளில் படிக்க அழைத்து சென்றார். மூத்தவனில் இருந்து ஒவ்வொருவராக என் தாயுடன் காலையில் கண்ணீரோடு கிளம்புவார்கள். அடுத்த நாள் என் தாய் மட்டும் தனியாக வருவார். 

அம்மா, அம்மா.. அண்ணன் எங்கே, அக்கா எங்கே என்று கேட்கும் எனக்கு கிடைத்த ஒரே பதில் "கோடை விடுமுறைக்கு" வருவார்கள் என்பதே. எனக்கு முன்னால் பிறந்த 7 பேரும் விடுதிக்கு சென்ற நேரத்தில், அடடா, அப்பா இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இனிமேல் அம்மா முற்றுமாக எனக்கு என்று கொண்டாட முற்பட்ட வேலையில் அம்மா சொன்னாள், நாளை காலை நாம் இருவரும் சீர்காழி செல்கிறோம் என்று.

ஏன் என்று கேட்க தைரியம் இல்லை. ஒருவேளை விடுதிக்கு என்று பதில் வந்தால்? அதனால் இன்னும் ஒரு இரவு ஏன் தாயை கொண்டாடலாம் என்று கண்ணீரோடு உறங்கி போனேன். 5 மணிக்கு தட புட என்ற சப்தம் கேட்டது. என் பெட்டி படுக்கையுடன் என் தாய் என்னை எழுப்பினாள். அவர்கள் கண்ணிலே தெரிந்தது இரவு முழுவதும் அழுது இருப்பார்கள் என்று. இந்த நேரத்தில் நானும் அழுதால் நல்லது  இல்லை என்று எண்ணி, அழாதே அம்மா, நானும் கோடை விடுமுறைக்கு வருவனே என்றேன். பல மணி நேர பிரயாணத்திற்கு பிறகு சீர்காழி சென்றடைந்தோம். அங்கே பள்ளியிலும் விடுதியிலும் செய்ய வேண்டிய காரியங்களை செய்து விட்டு என் அம்மா புறப்பட்டு சென்றார்கள்.

 7 வயதில் விடுதியா? என்ன செய்வேன். என்னால் முடிந்த வரை வாய் விட்டு அழுந்து விட்டு பிறகு என் பெட்டியை திறந்தேன். அதில் மேல் பகுதியிலே என் தாய் ஒரு பழைய சேதி தாளில் சுற்றி வைத்து இருந்தால் "பொருள்-விளாங்க-உருண்டை". மொத்தம் இருந்தது 60 உருண்டை. அதில் நாளுக்கு ஒன்று உண்டு கொள், இது முடியும் முன் மீண்டும் அனுப்புகிறேன் என்ற ஒரு சிறு குறிப்பு வேறு.இது நடந்து கிட்ட தட்ட 40 வருடங்கள் ஆகிவிட்டது. 



ஆனாலும் என் நினைவில் ஏதோ இது நேற்று நடந்தது போல் ஒரு உணர்ச்சி. அந்த காலங்களில் இந்த "பொருள் விளங்கா உருண்டை" தான் எனக்கு "பொருள் விளக்கிய உருண்டையாக செயல் பட்டது. ஒவ்வொரு மாலை வேளையிலும் ஒரு உருண்டையை எடுக்கும் போது என் தாயின் வாசம் கண்டேன். அதன் சுவையில் என் சகோதரிகளின் நேசம்.அதன் கடினத்தில் என் அண்ணன்களின் செல்ல கோபம்.

இந்த அனைத்தையும் அந்த உருண்டையில் கண்டேன். சில வேளைகளில் மீதீ உள்ள உருண்டைகளை எண்ணி இன்னும் கோடை விடுமுறைக்கு எத்தனை நாள் என்று அறிந்து கொள்வேன்.

இது "பொருள் விளங்கா உருண்டை அல்ல", வாழ்வின் "பொருளை உணர்த்திய உருண்டை".


இந்த உருண்டையை விழுங்கிய அடியேன் தான் "விசு". பலவேறு இடங்களில் படித்து, இன்று அமெரிக்காவில் ஒரு தணிக்கையாளராக பணிபுரிகின்றேன். சிறு வயதில் இருந்து தமிழ் மேல் ஒரு தலை காதல். அதனால் உருவானது தான் "விசுAwesomeமின்" துணிக்கைகள்.  என்ன தளத்தின் பெயரே வித்தியாசமாக உள்ளதா ? வேறொன்றும் இல்லை தமிழில் என் பெயர் விசுவாசம், இங்கே இந்நாட்டினர் வாயில் அது நுழையவில்லை, விசுவாசம் விசு"Awesome"  ஆனேன்!

எதை பற்றி எழதுகிறேன்...?

என் ஆரம்ப கால வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, திருமண வாழ்க்கை, மனைவி மற்றும் ரெண்டு ராசாதிக்களின் கொஞ்சலும் கெஞ்சலும், நட்பபுக்கள், கொஞ்சம் அரசியல் ...


என் பதிவில் எனக்கு பிடித்த பத்து ....(உன் இரண்டு பிள்ளைகளில் உனக்கு பபிடித்த பிள்ளை யார் என்பது போல் ஒரு உணர்ச்சி).



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...